Wednesday, March 24, 2010

இவர்களையெல்லாம் ஓங்கி அரைய வேண்டும்

அன்றாட வாழ்க்கையில் எண்ணிலடங்கா மனிதர்களையும் சூழ்நிலைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறோம். எதாவது ஒரு விதத்தில் நம் ஆதங்கத்திற்கு ஆளாபவர்களை 'பளார்' என்று ஒங்கி அரைய வேண்டும் போல இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விடும். உள்ளுக்குள்ளே குமுற வேண்டியிருக்கும். 'நம்மால் என்ன செய்ய முடியும்' என்ற கொள்கையிலேயே வாழ்ந்து வருகிறோம். நான் இப்படி பல சந்தர்ப்பங்களை அனுபவித்துள்ளேன்; இன்னும் எதிர் கொண்டு தான் வருகிறேன். அதனைப் பரிமாறிக் கொள்ளவே இந்த இடுகை.

1. திடீர் ஆங்கில மேதாவிகள்

உடன் படித்த நண்பனைச் சந்திக்கிறோம் (சில/பல ஆண்டுகளுக்குப் பிறகு). இத்தனைக்கும், இருவரும் தமிழ் தெரிந்தவர்கள், படித்தவர்கள். நாம் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் (தமிழில்), ஆங்கிலத்தில் பதில் வரும். என்னமோ 'யூ.கே'யில் பிறந்து, 'கேம்ப்ரிட்ச்' பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற மாதிரி அளட்டிக் கொள்வார்கள். தமிழ் பேசுவது கௌரவக் குறைச்சல் என்றும் ஆங்கிலம் பேசுவதனால் தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் இந்த அறிவுஜீவிகள் நினைத்துக் கொள்கிறார்கள். அந்த மாதிரி நண்பர்களை ஓங்கி அரைந்து விடலாம் போலிருக்கும்.

2. தியேட்டர் கவுண்டரில் நேரத்தை வீணடிப்பவர்கள்

ஜோடியாக வந்திருப்பார்கள். 'கவுண்டரின்' முன்னின்று கொஞ்சிப் பேசி படத் தேர்வு, உட்காருமிடத் தேர்வு எல்லாம் முடிந்து, அதற்கப்புறம் பணத்தை சட்டைப் பைக்குள் தேடியெடுப்பார்கள். அதற்கு யார் பணம் கொடுப்பது என 'செல்ல' சண்டைகள் எல்லாம் ந்டக்கும். பலர் இப்படி கவுண்டரில் செய்வதனால், சிலர் படம் பார்க்க முடியாமலே போய் விடுகிறது. முன்னதாகவே, என்ன படம், போதுமான பணம் என எல்லாத் தேவைகளையும் தயார் செய்து வைப்பார்களேயானால் இதற்கு ஒரு தீர்வு காண முடியும். இந்த கூட்டத்தையும் ஓங்கி அரைய என் மனம் துடிக்கும்.

3. திரையரங்கினுள்ளே

பொதுவாக தியேட்டர்களினுள்ளே இரு பிரச்சனைகளை சந்தித்துள்ளேன். முதலாவதாக, படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகு அரங்கின் உள்ளே நுழைபவர்கள். ஆரவாரம் செய்து, இடத்தைத் தேடி பிடித்து உட்காருவதற்குள், நமக்கு படம் பார்க்கும் ஆசையே போய்விடும். அதுவும் திரையை மறைத்தவாரு நின்று கொண்டு 'டிக்கட்டை' பார்த்து இடம் தேடுவது நமக்கு எரிச்சலாக இருக்கும். படம் ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வந்தால், யாருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
இரண்டாவதாக, தீவிரமாக படம் பார்த்துக் கொண்டிருப்போம். திடீரென தொலைப்பேசி ஒலிக்கும். மிகவும் தொந்தரவாக இருக்கும். மனதில் கடிந்துக் கொண்டே படத்தைப் பார்ப்போம். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. தியேட்டரினுள் கைபேசியின் ஒலியை அமுக்கி வைப்பது அனைவரும் அறிந்த ஒரு உலக பண்பாடு/நியதி. பலர் இதனை விளங்கிக் கொள்ளாதவரை இது நீடிக்கும். அதுவரை எனது அரை வாங்கும் பட்டியலில் இவர்கள் இடம் பெருவர்.

4. பிச்சை கேட்டு வருபவர்கள் (உடல் ஊனம் இல்லை)


உடல் ஊனம் எதுவும் இருக்காது. அசுத்தம், கந்தலான உடை, பல நாட்கள் கோரப்படாத தலை முடி என பிச்சைக்காரர்களுக்கு இருக்கும் எல்லா குணாதிசயங்களும் இவர்களிடம் தெரியும். பிச்சை எடுப்பார்கள். இவர்களில் சிலர் ஒரு படி மேல் சென்று, நாம் உதவ மறுத்தால் நமக்கே உபதேசம் செய்வார்கள், திட்ட கூட செய்வார்கள். 'தம்பி, எங்கள மாதிரி ஆளுங்களுக்கு காசு கொடுக்கனும், அப்போ தான் நல்லா இருப்ப' என சொல்பவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி சோம்பேறிளை கண்ணம் சிவக்குமளவு அரைந்து, 'போய் உழச்சி சாப்பிடு யா' என சொல்லத் தோன்றும்.

5. எரிந்து விழும் பஸ் ஓட்டுனர்கள்

இதை பலர் அனுபவத்திருப்போம். எல்லாருக்கும் 'டென்ஷன்' இருக்கும். ஆனால், இந்த பஸ் ஓட்டுனர்களின் போக்கு மிக கொடியது. தன் சொந்த பிரச்சனையில் உள்ள கோபத்தைப் பயணிகள் மீது காட்டுவது சரியல்ல. அதோடு நிருத்திக் கொள்ளாமல், பேருந்தை ஆபத்தான போக்கில் செலுத்துபவர்களும் உண்டு. வேகமாக ஓட்டுவார்கள்; திடீரென 'ப்ரேக்' போடுவார்கள்; சரியான 'ஸ்டாப்பில்' நிருத்த மாட்டார்கள். ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும் ஒரு அரைக்குப் பிறகு, இது போன்ற பஸ் ஓட்டுனர்களின் 'லைசன்சை' முதலில் பரிமுதல் செய்ய வேண்டும்.

6. ஊனமுற்றோர் அல்லது முதியவர்களுக்கு முன்னுரிமை

பேருந்து, விரைவு ரயில் போன்றவற்றில் பயணித்திருப்போம். ஊனமுற்றோர்களோ அல்லது வயதானவர்களோ தள்ளாடி நின்று கொண்டிருக்கையில், வாலிபர்கள் உட்கார்ந்து வருவது வேதனைக்குள்ளாக்கும் காட்சி. அதிலும், நின்று கொண்டிருக்கும் முதியோர்களையும் உடல் ஊனமுற்றவர்களையும் பார்த்தும் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக் கொண்டு வெட்கமே இல்லால் தனக்கென்ன என்று உட்கார்ந்து வரும் மக்களை என்ன செய்ய? கண்டிப்பாக அரையத் தான் வேண்டும்.

7. உறக்க பேசும் ஆசாமிகள்


பொதுவாகவே ஆசியர்கள் உறக்க பேசுபவர்கள் எனும் அபிப்பிராயம் ஐரோப்பியர்களிடம் பரவலாக இருந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இது உண்மை தான். பொது இடங்களில், குறிப்பாக பேருந்தில் உறக்க பேசுபவர்களை நாம் பார்த்திருக்கக் கூடும். அதுவும் கையில் தொலைப்பேசி ஒன்றிருந்தால், உலகத்தையே மறந்து விடுவார்கள். பிற பிரயாணிகளுக்கு அவதூறு உண்டு பண்ணும் வகையில் நடந்து கொள்ளும் இந்த மாதிரி ஆசாமிகள் கண்டிப்பாக அரை வாங்கத் தகுதியானவர்களே.

8. தலையாட்டி பொம்மைகளாக நடத்தும் நண்பர்கள்

சில நண்பர்களுக்கு நாம் அவர்களுடைய தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். உதாரணத்திற்கு, அவர்கள் எங்கு அழைத்தாலும், நாம் உடனே போக வேண்டும், மறுப்பு ஏதும் சொல்லக் கூடாது. ஏன், எங்கே, எதற்கு என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது என அவர்கள் விரும்புவர். நமக்கென எந்தவொரு விருப்பு வெருப்பு ஏதும் இருக்கக் கூடாதா? இப்படிப் பட்டவர்கள் நண்பர்கள் அல்ல. ஒரே அரையில் உனக்கும் எனக்கும் இனி எந்த பொடலங்காய் நட்பும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போலிருக்கும்.

9. அலட்சியமான அரசாங்க ஊழியர்கள்

வரி, 'பென்ஷன்' என அரசாங்க கொடுத்தல் வாங்கலிடமிருந்து யாரும் தப்ப முடியாது. இது போன்ற விசயங்களில் அரசாங்க ஊழியர்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், அவர்களது அலட்சியப் போக்கினால் நமக்கு ஆக வேண்டிய வேலைகள் தள்ளிப் போகின்றன. தனக்கென்ன என்ற ஆனவமும், அரசாங்க ஊழியர்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாதென்றும் இவர்களிடம் ஒரு எண்ணம் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நாம் விடும் அரையில் இவர்களது கர்வம், ஆனவம், அகம்பாவம் எல்லாம் கரைந்து போய், தங்கள் பணிகளை ஒழுங்காக செய்ய வேண்டும்.

10. தொலைக்காட்சியில் விருப்ப பாடல்


இதைப் படித்தவுடன் நீங்கள் சிரிக்கலாம். ஆனால், எனக்கு இது ஒரு 'சீரியசான' விசயம், குறிப்பாக நான் அஜித் ரசிகன் என்பதனால். பல முறை பார்த்திருக்கிறேன். அஜித் ரசிகர்கள் அஜித் பாடல் வேண்டுமென கேட்டால், உடனே உரையாடல் துண்டிக்கப் பட்டுவிடும். இல்லையேல், நீங்கள் என்ன சொன்னீர்கள் என சரியாக விளங்கவில்லை என்று தொகுப்பாளர்கள் வாய்க் கூசாமல் பொய் சொல்லிவிட்டு, வேரு நடிகர்களின் பாடலை ஒளிபரப்புவார்கள். அந்த தொகுப்பாளர்களுக்கு அரை எல்லாம் பற்றாது. மாறாக, அவர்களை நிக்க வைத்து சுட வேண்டும் என்பதே எனது தீர்ப்பு...

Tuesday, March 16, 2010

மோகன்ராம் அவர்களுக்கு நன்றிகள்

மோகன்ராம் அவர்கள் நம்ம 'தல' அஜித்தைப் பற்றியும் சமீபத்தில் அஜித்தைச் சர்ச்சைக்குள்ளாக்கிய பேச்சு பற்றியும் தன் வலைப்பூவில் இடுகை இட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பதிவு.


ஒரு சக சினிமா குடும்பத்திலிருந்து ஒருவராக, தோழனாக தன் இடுகையை எழுதியிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயத்தில், இவரைப் போல் சினிமா துறையில் உள்ளவர்கள் உறுதுனையாகவும் பக்கபலமாகவும் இருப்பது (நியாயம் நம் பக்கமிருக்கும் பட்சத்தில்) என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியது.

அவர் அலசியுள்ள முக்கிய கருத்துக்களை பட்டியளிட்டுள்ளேன். இதோ:

  • அஜித் அவர்களின் பேச்சில் வெளிப்பட்ட நியாயங்கள்

  • பேச்சின் இடம், பொருள், ஏவல்

  • அஜித்தின் பாராட்டக்குரிய மன தைரியம் மற்றும் நல்ல குனாதிசயங்கள்

  • ரஜினி அவர்களின் ஆமோதிப்பு


  • அந்த இடுகையை படிக்க இங்கே செல்லவும்.

    மோகன்ராம் அவர்களுக்கு அனைத்து அஜித் ரசிகர்கள் சார்பாக கோடி நன்றிகள். :)

    Friday, March 12, 2010

    ஆசையே அலை போலே, நாமெல்லாம் அதன் மேலே...

    கனத்த மழை பொழிந்து ஓய்ந்திருந்தது. கதிரவன் மெல்ல தன் முகத்தைக் காட்டத் தொடங்கினான். மணியைப் பார்த்தேன். கடிகாரம் சிரித்துக் கொண்டிருந்தது. சரியான நேரம்தான். அம்மா செய்த பணியாரத்தை வாயில் கவ்வியவாறு காலணியை மாட்டினேன். வீட்டைவிட்டு வெளியேறி பேருந்து நிலையத்தை நோக்கி கால்கள் வேகமாக நடந்தன.

    அதற்கு முன் என்னைப் பற்றி சொல்ல வேண்டும். என் பெயர் வினோத், வயது 22, ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவன்.
    'கம்ப்யூட்டர் சைன்ஸ்' முடித்து இரு மாதங்களாக தீவிரமாக வேலைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன். ஏறி இறங்கிய கம்பேனிகள் பல, எண்ணிக்கை சரியாக நினைவில் இல்லை. அப்போது கூட ஒரு கம்பேனி 'இன்டர்வியூ'விற்கு தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். காம்பெஃ கம்பேனி. இதில் மட்டும் வேலை கிடைத்தால், ஒரு வழியாக வாழ்க்கையில் 'செட்டில்' தான் என்ற எண்ணம் மனமுழுவதும் இருந்தது. இண்டர்வியூ காலை மணி பதினொன்றுக்கு. கம்பேனி பக்கம் தான் என்ற ஒரு சின்ன அலட்சியம் தான் எனக்கு.


    பத்து நிமிஷ காத்திருத்தலுக்குப் பிறகு பேருந்து வந்தது. சரியான கூட்டம். ஒரு வழியாக முண்டியடித்து ஏறினேன். அளவு கடந்த பயணிகள் எண்ணிக்கையை ஈடுகட்டியபடியே, பேருந்து மெதுவாக நகர்ந்தது. புழுக்கம் ஒரு பக்கம், கையில் வைத்திருந்த 'பஹயிலை' வீசியவாறு நின்றுக் கொண்டிருந்தேன். பேருந்து அடுத்த 'ஸ்டாப்பில்' நின்றது.

    மிச்ச சொச்ச இடத்தையும் ஏறிய பயணிகள் நிரப்ப, "உள்ள போங்கப்பா, படிகட்டுல நிக்காதீங்க" என்று கண்டக்டர் தன் வழக்கமான புராணத்தை ஆரம்பித்தார். குழந்தை ஒன்றின் அழுகை, ஒரு கணவன் அவன் மனைவியுடன் சண்டைப் போடும் காட்சி, காலேஜ் மாணவர்களின் ஜாலியான வெட்டிப் பேச்சு என என்னைச் சுற்றி பல கூத்துகள், சத்தங்கள்.

    எதையுமே காதில் வாங்காத படியே பஹயிலில் வைத்திருந்த சான்றிதழ்கள், 'ரெசுமே' மற்றும் இதர பத்திரங்கள் எல்லாம் சரியாக இருக்கின்றனவா என உறுதிப் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் அவளைப் பார்த்தேன். யார் பெற்ற பிள்ளையோ, அத்தனை அழகு. நல்ல நிறம், சுமாரான உயரம், அடர்த்தியான தலை மயிர். அவ்வளவு பெரிய கூட்டத்திலும் பளீர் எனத் தெரிந்தாள். பட்டென என் கண்கள் அவளை மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என எல்லா கோணங்களிலும் 'ஸ்கேன்' பண்ணியது. என்ன ஆச்சிரியம், எனக்கு பிடித்த எல்லா அம்சங்களும் அவளிடம் அப்படியே பொருந்திருந்தன. கறுப்பு நிற பாவாடை தாவணி அணிந்திருந்தாள். கறுப்பும் எனது விருப்ப நிறம் தான்.

    காலையில் சாமி கும்பிட்டதாலோ என்னவோ தெரியவில்லை, கடவுளின் தரிசனம் நிரம்பி வழிந்தது அன்று. அவளே வந்து என் பக்கத்தில் நின்றாள். பேருந்தின் வேகம் கூட, சற்று காற்றடிக்க, தாவணி லேசாக விலகியது. அவளது இடுப்பு ஓரளவு தெரிந்தது. கரிய நிற தாவணி தன் உடல் முழுவதும் பரவி இருக்க, நல்ல எலுமிச்சையும் தக்காளியும் கலந்த நிறத்தில் அவளது அந்த இடுப்பு பகுதி மட்டும் தெரிந்ததே, ஆஹா, என்ன சொல்வது, சித்தரிக்க வார்த்தைகள் தேட வேண்டும்.

    "அங்க பார்க்காத, அப்படி எல்லாம் குருகுருனு லுக்கு விட்டா செருப்படி தான்டீ" என, என்ன தான் மனசாட்சி குமுறினாலும், கண்கள் கேட்பதாக தெரியவில்லை. ஓரக் கண்ணில் அவளையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன், நிறுத்த முடியவில்லை. யாராவது நான் பார்ப்பதைப் பார்த்து விடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தது. சுற்றும் முற்றும் அவ்வப்போது 'செக்' பண்ணியபடியே, என் கண்கள் அதன் கடமையைச் சரியாக செய்துக் கொண்டிருந்தன.

    "சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா" என்ற பாடல் கேட்டது. "அட, நம்ம தல பாட்டு", எனக்கே உரிய பாணியில் என் உதடுகள் விரிய சிரித்துக் கொண்டேன். கைப்பையிலிருந்து செல் போனை எடுத்தாள். "இவளது போன் தானா, நம்ம ஆளு பாட்டு ரிங்டோனா வச்சுருக்காளே... ஒரு வேளை அஜித் ரசிகையா இருக்குமோ", என்னையே கேட்டுக் கொண்டேன். "ரகுமான் ஃபேனா கூட இருக்கலாம்டா நாயே" என்று மீண்டும் மனசாட்சி 'மைக்' போட்டு உரக்கக் கத்தியது.

    "ஹலோ" என்றாள். எனக்கு இருக்கும் நல்ல பழக்கங்களில் ஒன்று ஒட்டுக் கேட்பது. அவள் என்ன தான் பேசுகிறாள் என்று தெரிந்துக் கொள்ள ஒரு அடி இன்னும் அவள் பக்கம் நெருங்கி கவனம் செலுத்தினேன். அதோடு அவள் குரலையும் அப்படியே கேட்டுவிடலாமே. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

    "அஞ்சு, நீ அங்கேயே வெயிட் பண்ணு. இதோ இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்" என்றாள்.

    "ஆஹா, என்ன குரல். சுசிலா மேடம் தோத்தாங்கய்யா" என்று நானே எனக்குள் முனுமுனுத்தேன். யார் இவள்? இதற்கு முன் எங்கேயும் பார்த்ததில்லை. இவளது முகவரியை எப்படியாவது இன்று கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற ஒரு திடீர் ஆசை பெருக்கெடுத்தது. அம்மாவிடம் சொல்லி இவளை எப்படியாவது பெண் கேட்க சொல்லலாம் என்ற உத்தேசம் பிறக்குமளவுக்கு அவளது அழகு என்னைக் கட்டிப் போட்டது. சிறிது நேரம் கழித்து பேருந்தை விட்டு இறங்கினாள். மந்திரித்து விட்டாற் போல எங்கே எதுற்காக என்று எதுவுமே அறியாமல் நானும் இறங்கினேன், எனக்கு வேண்டியதெல்லாம் அவளது 'அட்ரெஸ்'. அவளது தோழி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள். இருவரும் எதோ பேசினார்கள்.

    நான் எதிரே உள்ள நாயர் கடையில் 'டீ' சொல்லிவிட்டு, சற்று மறைவிலிருந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை மட்டுமே கவனித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். தூரத்திலிருந்து பார்க்கவும் அழகாக இருந்தாள், கோவா படத்தில் வரும் மெலனி மாதிரி. "ஸி இஸ் தெ ஒன், இவ்வளவு காலம் எங்கிருந்தாள்" என நானே என்னைக் கேட்டுக் கொண்ட நேரம் அது. எனக்கு அப்படியே "உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே, என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே" என்று பரத்வாஜ் இசையமைக்க, எஸ்.பி.பி பாட, தல அஜித் ஆடியது போல எழுந்து ஒரு சின்ன ஆட்டமாவது போட வேண்டும் போல இருந்தது.

    சில நிமிடங்கள் கடந்திருக்கும். தன் தோழியுடன் விடைப் பெற்று 'ஆட்டோ' ஒன்றை நிறுத்தி பட்டென ஏறினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்கள் அவள் போவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தன, எதையோ இழப்பது போல மனம் இறுக்கமானது. நாயர் டீயை கொண்டு வந்து முன் நீட்டினார். எதிர்திசையில் போய்க் கொண்டிருக்கும் ஆட்டோவை பார்த்தபடியே 'கிலாஷை' பிடிக்கத் தவறி, டீ கீழே வைத்திருந்த என் பஹயில் மீது விழ, காப்பி பஹயிலின் முகப்பை நனைத்தது. பஹயிலை எடுத்து உதறினேன். "வெயிட் அ மினிட். பஹயில்... பஹயில்... இண்டர்வியூ... ஓ காட்" நெஞ்சு படபடத்தது. "இப்போ தான் ஞாபகம் வந்ததா" என்று குறுக்கிட்ட மனசாட்சியின் குரலை துளியும் பொருட்படுத்தாமல், கண்கள் கடிகாரத்தைப் பார்த்தன. சரியாக மணி பதினொன்றரை.


    நான் போக வேண்டிய கம்பேனி இருக்கும் இடத்தை எல்லாம் கடந்து விட்டதாக அப்போது தான் உணர்ந்தேன். எனக்கு நானே ஆறுதல் கூறியவாரு, காம்பேஃ கம்பேனியை நோக்கிப் புறப்பட்டேன். சுமார் பனிரெண்டு மணிக்கு அந்த கம்பேனியை சேர்ந்தடைந்தேன். இண்டர்வியூ அதிகாரியைச் சந்தித்தேன். தாமதமாக வந்ததால், நம்பும் படியாக எதோ ஒரு பொய்யை அவரிடம் அவிழ்த்து விட்டேன். பொய் சொல்லுதல், அதுவும் நம்பும் படியாக ஒப்பிப்பது எனக்கு அத்துபடி, எனது நல்ல பழக்கங்களில் இதுவும் அடங்கும். அவர், 'சாரி வினோத், யூ ஆர் லேட். வி ஹேட் ஒன்லி ஒன் பொசிஷன் அண்ட் வி ஹெவ் செலெக்டட் சம்ஒன் எல்ஸ்' என்று முகத்தை வருத்தமாக வைத்தபடியாக சொன்னார்.

    எனக்கு இடி விழுந்தாற் போல இருந்தது. கண்கள் கலங்கியது உண்மை. கம்பேனி வாசலை மறைத்து, வெளி புறம் பார்த்தவாறு கைகளைப் பிசைந்து நின்றுக் கொண்டிருந்தேன். அவ்விடத்தை விட்டு போக மனம் வராமல், என்ன செய்யவதென்று தெரியாமல் திகைத்த அந்த நொடிகளை மறக்கப் போவதில்லை. "நல்ல சந்தர்ப்பத்தை வீணடித்து விட்டேனே", "அம்மா என்ன சொல்லப் போகிறாரோ", "அப்பாவுக்கு தெரிந்தால் செருப்படி விழுமோ" என்று ஏகப்பட்ட கேள்விகள் அப்போது என்னைச் சுற்றி உலா வந்தன.

    'எக்ஸ்கியூஸ்மீ... கொஞ்சம் வழி விடுங்கோ', திடீரென ஒரு குரல், பெண்ணுடையது. சில வினாடிகளுக்குப் பிறகு 'ஐ எம் சாரி' என்று சொல்லி வாசலிலிருந்து விலக முற்படும்போது, இந்த குரலை எங்கேயோ கேட்டுள்ளோமே என்று திரும்பிப் பார்த்தேன். பேருந்தில் பார்த்த அதே பெண். அப்பேற்பட்ட சோகத்திலும் ஒரு இன்ப அதிர்ச்சி. மீண்டும் அவளைச் சந்திப்பேனா என்று கனவா கண்டேன்? நேருக்கு நேராக அவள் முகத்தை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். யாருடனோ போன் பேசியவாறு இருந்தாள். இங்கு என்ன செய்கிறாள் என்ற கேள்வி என்னுள் உதயமாகி அடங்குவதற்குள், "டேடி, ஐ கோட் தெ ஜாப்" என்று சொல்லிக் கொண்டே என்னைக் கடந்து வெளியே சென்றாள்...

    Monday, March 8, 2010

    அஜித் + கௌதம் கூட்டணி = சாத்தியமா?

    இதுவரை நாம் அறிந்தவை:

    1. தயானிதி தயாரிப்பில், கௌதம் அஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்கவுள்ளார்.

    2. இப்படத்தின் ஏனைய முன் ஏற்பாடுகளை கௌதம் செய்து வருவதாக அவரே தனது அன்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

    3. இதற்கிடையில், அஜித் திடீரென கார் பந்தயத்தில் (இந்த முறை F2)கலந்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளார்.

    4. இந்த கார் பந்தயம் வரும் ஏப்ரலில் துவங்கி அக்டோபரில் முடிவடையும் போல தெரிகிறது.

    சரி, இப்போது விசயத்திற்கு வருவோம்.

    இப்போது தான் அசல் கொடுத்த 'துன்ப' அதிர்ச்சியிலிருந்து ஒரு வழியாக எழுந்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் இடி போன்ற ஒரு செய்தி. என்ன அது? அதாவது, கௌதம் சிம்புவை வைத்து அடுத்து ஒரு ஆக்க்ஷன் படம் எடுக்கப் போகிறாராம்.


    ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தனக்கு வசப்படும் கால அவகாசத்தை, நீண்ட நாட்களாக கெடப்பில் கிடக்கும் சமீராவின் 'த்ரில்லர்' படம் ஒன்றுக்கு செலவிடுவார் என்று செய்திகள் உளாவின. அதுமட்டுமின்றி, அந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், சுமார் ஓரிரு மாதங்களில் முழுமை அடையக் கூடும் என்பதையும் அறிந்தேன். நன்று.

    ஆகவே, எப்படியும் அக்டோபர் மாதத்தில் இந்த கூட்டணி சேருமென்று கனவுலகில் மிதந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை, அடுத்து கௌதம் சிம்புவுடன் சேர்ந்து இன்னொரு படம் பண்ணுவதாக செய்திகள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதற்கு என்ன, என்கிறீர்களா?

    இது முழுக்க முழுக்க புதிய 'ப்ராஜெக்ட்' என்பது குறிப்பிடத்தக்கது. கௌதம் அதிக பட்சம் நான்கே மாதங்களில் படத்தை முடித்து வெளியிடும் பேரரசு அல்ல என்பதை நினைவில் கொள்க. எப்படியும் ஆரு மாதங்களாவது வேண்டும் இவருக்கு. அதற்கப்புறம், 'post production' வேலைகள், பட ரிலீஸ் என சுமார் இரு மாதங்கள் தேவைப்படும் (எனது குறைந்த பட்ச கணிப்பு). ஆக, இந்த ப்ராஜெக்ட் எப்படியும் முடிய இந்த ஆண்டு இருதியாகிவிடும்.

    இதற்கிடையே, கார் பந்தயம் முடிந்து திரும்பிவிடுவார் அஜித். கால்ஸீட்டை விரயமடிக்க விரும்பாத தயாரிப்பாளர் ஏதாவது சில மொக்கை இயக்குனர்களை அஜித்திற்கு பரிந்துரைச் செய்வார். அஜித்தான் கருணையின் மரு உருவம் ஆயிற்றே. உடனே, அந்த பட்டியலில் இருந்து, ஏதாவது ஒரு 'கைத்தேர்ந்த' இயக்குனரை தேர்வு செய்யக்கூடும். மீண்டும் தன் 'நண்பன்' சரணுடனே சேர்ந்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

    இறுதி பத்தியில் நான் சொன்னவை ஏற்கனவே நடந்தவை தானே. ஆம், அசலைத் தான் சொல்கிறேன். போட்ட தழும்பு இன்னும் ஆறவில்லை. அதற்குள் இன்னொன்றா?
    இப்போழுது, நீங்கள் சொல்லுங்கள். அஜித் + கௌதம் கூட்டணி = சாத்தியமா?

    வருத்தம், பயம் & கலக்கத்துடன்,
    ஒரு ரசிகன்...

    Tuesday, March 2, 2010

    தவறு என் மீது, அஜித் நல்லவர் - இயக்குனர் பாலா

    அஜித்திற்கும் இயக்குனர் பாலாவிற்கும் நடந்த யுத்தம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, அஜித் ரசிகர்கள் இதை அவ்வளவு இலகுவாக மறந்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் நக்கீரனில் 'கொஞ்சநேர வருத்தம்' எனும் தலைப்பில் இயக்குனர் பாலாவின் குமுறல் ஒன்று வெளியானது. அது பின்வருமாறு:



    தனக்கும் அஜித்திற்கும் நிகழ்ந்த மனக் கசப்பில் தவறு தன் மீது தான் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அஜித் தன்னை விட நல்லவர், அப்படி சொல்லவதை விட, அஜித் அளவிற்கு அவர் நல்லவர் இல்லை என்று கூறியிருப்பாதாக அந்த செய்தி கூறுகிறது.

    இது உண்மை ஆயினும், அஜித் ரசிகனான எனக்கு, என் சந்தோஷத்தை வார்த்தையால் சித்தரிக்க இயலவில்லை. உண்மையை நீண்ட நாட்களாக மறைத்து வைக்க முடியாது என்பது புலப்படுகிறது. 'Better late than never' என்று சொல்வார்களே, அது போல இப்போதாவது உண்மையை தன் வாயாலே ஒப்புக் கொண்டாரே, பாலாவிற்கு முதலில் எனது நன்றிகள்.

    இனி வரும் காலங்களில், இவர் அஜித்துடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புகள் வரலாம். இந்தக் கூட்டணியை அஜித் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என கேள்விகள் எழலாம், எழும். மற்றவர்களைப் பற்றித் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை, இதில் நான் 'neutral' தான். இருவரும் சேர்ந்து படம் பண்ணினால், வரவேற்பேன். இல்லையேல், யாருக்கும் நட்டம் இல்லை என்பேன்.

    ஒரு சில ரசிகர்கள், அண்ணன் கவுண்டமணி சொன்னது போல "கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கணும்..." எனும் கொள்கையை இதில் புகுத்துகிறார்கள். அதாவது, இருவரும் சமரச நிலை அடைந்து ஒரு படத்தில் பணி புரிந்தால் நன்றாகத் தான் இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

    இருப்பினும் எனக்கு, இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது இன்னும் பனி மூட்டமாகவே உள்ளது. எதற்காக இந்த திடீர் அறிக்கை? ஏன் இந்த திடீர் மன மாற்றம் பாலாவிற்கு? இப்படி பல கேள்விகள் விடையின்றி தவிக்கின்றன. இன்னொன்று, இந்த செய்தி நக்கீரனில் வெளிவந்தது மேலும் இதன் நம்பகத்தன்மையை குறைக்கிறது.

    எது எப்படியோ, நமது கையில் என்ன இருக்கிறது? சினிமாத் துறையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.

    பி.கு இந்த கூட்டணி சேரக் கூடுமா? சேர வேண்டுமா? சேரக் கூடாதா? பின்னூட்டத்தில் உங்களது கருத்துக்களைப் பகிரலாமே...